
வாதம், பித்தம், சிலேத்துமம்(கபம்) மூன்றும் ஆகாது. எனினும்
சிலேத்துமத்தின் சேர்க்கைதான் (சேத்துமம்) உச்சிக்குழிக்குக் கீழே
உள்நாக்குக்கு மேலே எரிகிற பச்சை விளக்கை பங்கப் படுத்துகிறது. ஆகவே தான்
சுழுமுனை வாசல் திறக்க கபம் வெளியேற வேண்டும். இதற்குக் காலைப் பிடித்தல்
ஒன்றே வழி. (கால்-காற்று) காற்றில் உட்கலந்து ஊடாடி நிற்கும் நெருப்பை
யோகிகள் உட்கொள்கிறார்கள். இந்தக் கனலால் கபம் அறுபடுகிறது. இந்தக் கபம்
வெறும் சளி மாத்திரம் அல்ல. உடலெங்கும் ஒட்டிக் கிடக்கும் கசிறு. இதை
புத்தவேதம், " உட்கவிழ்ந்த மேகம்" என்று கூறுகிறது. ஊத்தை சடலம்,
உட்குழிந்த பாண்டம் என்று உடல் அழைக்கப்பட்டதற்கு "கபமே" மூலகாரணம்.
எனவே
கபத்தை எமன் என்றே அழைக்கலாம்."ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கி" என்கிற
திருவாசக அடியால் இதைத் தெளிவு பெறலாம். ஊன் என்பது ஊத்தைக்கசிறு, உடல்
என்பதாக நாம் கொள்கிற பொருள் தவறு. இந்த ஊன் உருகுவதற்கு உள்ளொளி
பெருகவேண்டும். வாசியோக சாதகர்கள் காற்றிலிருந்து (பிராணன்) நெருப்பைக்
கொள்முதல் செய்கிறார்கள். இந்த நெருப்பின் நேயச் சேர்க்கையால் உள் ஒடுங்கிய
பொறி உள்ளொளியாக விளக்கம் பெற்றுப் பெருகுகிறது. பிறகு உவப்பிலா
ஆநந்தமாய்த் தேன் அமிர்ததாரையாக வருகிறது. இது வாசியோகத்தின் சிகர சாதனை
என்று கருதலாம்.
கபம் என்பது உடல் துரியநிலை பெற (நிர்விகல்ப சாயுச்யநிலை) இடையூறாக
இருக்கிறது. மாவுப்பொருட்கள் நிறைந்த உணவுகள் அனைத்தும் கபம் விளைகிற
கால்வாய்கள் எனலாம். "கோழை கபம் தான் யமன்!" இதை நீக்க சித்தர்களால் ஆகாது.
வாசியோகக் கனலாலே தான் எரிக்க முடியும்.
Post a Comment