
பிரமரந்திரத்தில் ஊசி துவாரத்தில் உயிர் நிற்கும் நிலையே ஞானம் ஆகும். இந்நிலையில் உள்ளபோது திரிகால உணர்வும் தெரியும். ஆன்மா உச்சி மண்டையில் ஏறி வெட்டவெளியில் சென்று மூன்று காலத்தையும் உணரும். முதுகுத் தண்டின் எலும்பின் உள்ளே சிறிய ஊசியைச் செலுத்தும் அளவுள்ள துவாரத்தின் வழியாகப் பிராணன் செல்லும்.
இந்த எலும்பின் உள்ளே ஓடுகிற வாசியே ஆன்மாவாகும். இவ்வாறு எறிமுனை மூக்குக்கு வரும். வாயுவான ஆன்மா எலும்பில் உள்ள துளையின் வழியாகப் புருவ மத்தி ஏறும். இவ்வாறு ஆறு ஆதாரங்களைக் கடந்து புருவமத்தியின் வழியாக உச்சி மண்டைக்குச் செல்லும்.காயசித்தி பெற்ற பின்பு நரைத்த முடி கறுத்துவிடும்.
உடல் பலமடையும். சரீரம் வெகு காலத்துக்கு நிலைத்து நிற்கும். ஆன்மா உச்சி ரோமம் வழியாகச் சேர்ந்து ஏறி, ரோமக்கால்களைத் தொடர்ந்து பற்றி 12 அங்குலம் மேலே ஏறும். உச்சிக்கு மேலே 12 அங்குலம் மேலே துவாதசாந்தப் பெருவெளியில் ஆன்மா செல்லும்.
அப்போது கூடுவிட்டுக் கூடு பாயும் நிலை உண்டாகும். பிராணன் முதுகுத் தண்டு வழிமேலே ஏறிப் பிடரி, மூக்கு நுனி கடந்து சதா புருவ மத்தியிலோ, சஹஸ்ராரத்திலோ ஒடுங்கிவிட்டால் நிர்விகல்பசமாதி நிலையை அடையலாம். மெளன நிலை போல் மோனநிலை கிடைக்கும். மோன நிலையில் பிராணன் ஒடுங்கியபின் உயர்வு, தாழ்வற்ற நிலை ஏற்பட்டுவிடும். இதுவே எல்லாம் பிரம்மமயம். இதை எல்லாரும் அடையலாம். இதற்கே மறு பிறவி கிடையாது.
Post a Comment